வியாழன், 13 டிசம்பர், 2018

புறநானூறு 189


சங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்... அப்படி மன்னன் வாழாதநிலையில் அவனை வழிப்படுத்தி அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களே செய்துள்ளனர். மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப்பாடல் இது. பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்.
                          மன்னனாகட்டும்...கல்லாத மக்களாகட்டும்... இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், பலவற்றை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் செய்கின்றார் புலவர்.. புறநானூற்றின் 189 ஆவது பாடல். இதோ பாடல்..
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
கருத்துரை
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற மன்னர்களுக்குப் பொதுவாக்காமல் தானே ஆட்சி செய்த ஒரு மன்னனாக இருந்தாலும் நடு இரவிலும் பகலிலும் துயிலாது விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லா ஒருவனாக இருப்பினும் உண்பது நாழி உணவே. உடுப்பது இரண்டு ஆடையே. பிற தேவைகள் இருவருக்கும் ஒன்றே. ஆதலால், செல்வத்தைப் பெற்ற பயன், பிறருக்குக் கொடுத்தலாகும். நான் பெற்ற செல்வத்தை நானே அனுபவிப்பேன் என்றால் நமக்குக் கிடைக்காமல் போவன பலவாகும்.
மன்னனுக்கும் சாமானிய  மனிதனுக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமென்றால் உணவிலும் உடையிலும்  காட்டலாம். உயர்ந்த ஆடை, உயர்தர உணவு என்று! ஆனால், அதையும் நீ நாழி உணவுதான் உண்ணமுடியும். இரண்டு ஆடையைத்தான் உடுத்த முடியும். இதற்குமேல் உணவை உண்ணவும் முடியாது, ஆடையை உடுக்கவும் முடியாது. இதைத் தவிர மனிதனின் மற்ற உடல், மனத் தேவைகளும் உணர்ச்சிகளும் இருவருக்கும் ஒன்றுதானே?  செல்வம் இருப்பதால் மட்டும் நீ வாழ்ந்தவனாகிவிட மாட்டாய்; கொடுப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். கடைசியாக ஒரு வார்த்தையைச் சொல்லுகிறார் பாருங்கள்...அப்படி யாராவது வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தால் வாழ்க்கையில் தவறவிடுவனவைதான் அதிகம் என்கிறார். ‘சிலவே’ என்றுகூடச் சொல்லவில்லை, ‘பலவே’ என்கிறார் நக்கீரர். அப்படி நினைப்பவர்களுக்கு நம் புலவர் கொடுக்கும் சாட்டைஅடி இது.
இதற்கெல்லாம் மேலாக, இதையெல்லாம் தமிழன் அன்றைக்கே சிந்தித்தான் என்பதுதான் தமிழினத்தின் பெருமை; தமிழரின் தகமை.


சனி, 26 மே, 2018

கொற்கை வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்



கொற்கை வெற்றிவேல் அம்மனும்
வெற்றிவேல் செழியனும்
தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கின்றபோது நாட்டுப்புறம் சார்ந்த கதை, பாடல், வழிபாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராயின் பல புதிய தகவல்களையும், வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களையும் பெறக்கூடியதாய் உள்ளது. அவ்வகையில் பழந்தமிழரின் தலைநகராய் விளங்கிய கொற்கையில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற வெற்றிவேல் அம்மன் வழிபாடும் வழிபாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் இலக்கியச் சான்றுகளும் வாய்மொழிச் செய்திகளும் தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யத் தூண்டுவனவாய் அமைந்துள்ளன.
கொற்கை வெற்றிவேல் அம்மன்
          பழம்பாண்டியர்களின் தலைநகராகவும் சங்க இலக்கியத்தில் தம் பெருமையை பதித்துக்கொண்ட கடற்கரைத் துறைமுகமாகவும் இலங்கியது கொற்கை நகரம்.
          முத்துக்களும் பலவகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப் பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் (மதுரைக்காஞ்சி. 312 – 323) மதுவகைகளும் கண்ணாடிச் சாமான்களும் (புறம். 56:18) கொற்கைப் பெருந்துறைக்கு வந்திறங்கின1 என்பதால் கொற்கையின் சிறப்பினை அறிய முடிகின்றது.
          தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் கொற்கை அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் கிழக்கிலும் உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
          கொற்கையை மதுரோதயநல்லூர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன2
          பொற்கை என்று கொற்கைச் செப்பேட்டுப் பிரதியில் இடம்பெற்றுள்ளது. கடைச்சங்க காலத்தில் விளங்கிய பாண்டிய மன்னர்களுள் ஒருவர் பொற்கைப் பாண்டியன். கண்ணகி முன் தோன்றிய மதுராபுரித் தெய்வம் பாண்டியர்களின் செங்கோல் பெருமையைக் கூறும்போது பொற்கைப் பாண்டியன் பெருமையை (சிலம்பு 23: 49-53) எடுத்துரைத்துள்ளது.
          கி.பி. 130 வரை கொற்கை, பாண்டியரின் தலைநகராக இருந்த செய்தியை தாலமி என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். கொற்கை தலைநகராக இருந்தபோது அதனை ஆட்சி செலுத்தியப் பொற்கைப் பாண்டியனின் செங்கோல் திறத்தைப் பாராட்டுமுகமாக தலைநகர்பொற்கைஎன்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கொள்ளலாம். இன்றும் ஊர் விழாக்களில் பொற்கை என்றே கொற்கை குறிக்கப்படுவதைக் காணக் கூடியதாய் உள்ளது.
          பண்டைத் தமிழகத்தின் தலைநகராக விளங்கிய கொற்கையில் குளத்தின் நடுவில் அமைந்துள்ளதேவெற்றிவேல் அம்மன்கோவில். நாட்டுப்புற தெய்வமாக விளங்கும் இவ் வெற்றிவேல் அம்மன், வரலாற்று மீட்டுருவாக்கத்தில் பெறுகின்ற இடத்தை ஆய்வதே இக்கட்டுரை.
வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்
          மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தீர்ப்பால் உயிர் மாய்கிறான். கண்ணகியும் உயிர் துறக்க, பத்தினித் தெங்வத்திற்கு வழிபாடு நிகழ்த்த எண்ணிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயம் சென்று, கல்லெடுத்து கனகவிசயர் தலைமேல் ஏற்றிக்கொண்டு மீள்கிறான். வழியில் கங்கையின் தென்கரையில், குமரித்துறை படிந்து கங்கை ஆடச் சென்ற மாடலமறையோனைச் சந்திக்கின்றான். அவன் கொற்கைக்கோமான் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த செய்தியைக் கூறுகிறான்.
            கொற்கையில் இரந்த வெற்றிவேற் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைந் நூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி3
இவ்விலக்கியச் சான்றால் கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த பிறகே செங்குட்டுவன் வஞ்சியில் கண்ணகிக்குச் சிலை வடித்து விழா எடுத்தான் என்பது பெறப்படுகிறது.
          கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்தப் பின்னர்தான் மதுரைக்குச் சென்று அரசாட்சியை ஏற்றார் என்பதும்
            ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்மதைக் காக்கும் முறைமுதற் கட்டிலின்
நிறைமணிப் புரவி ஓர் ஏழ்பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினான் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினான்4         
என்ற சிலப்பதிகாரத் தொடர்களால் அறியப்படுகிறது.
கொற்கையில் வெற்றிவேல் செழியனால் விழா எடுக்கப்பட்ட கண்ணகி வழிபாடே வெற்றிவேல் அம்மன் வழிபாடாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இன்றும் கொற்கை மாநகரில் நடைபெற்று வருகிறது. இடப்புறத்தில் தலையைச் சாய்த்திருக்கும் அம்மனின் சிலைக்கு ஊர்மக்கள் கூறுகின்ற காரணமும் வழிவழியாக கண்ணகி வழிபாடு கொற்கையில் இருந்து வந்த வரலாற்றுச் சுவட்டைக் காட்டுவதாகவே உள்ளது. ஆயிரம் பொற்கொல்லர்களை அழைத்து வந்து வெற்றிவேற் செழியன் ஒரு மாலை பொழுதிலே உயிர்ப்பலி ஊட்டி சாந்தி செய்தபோது அது கண்ட கண்ணகி தாங்க மாட்டாது தலை அசைத்தாள்5 என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இன்றும் தலை சாய்ந்த நிலையிலேதான் அம்மனின் சிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியனால் கொற்கையில் விழா எடுத்து வழிபாடு செய்யப்பட்ட கண்ணகியின் வழிபாடு, கண்ணகி வழிபாட்டை நடத்திய வெற்றிவேல் செழியனின் பெயரால் வெற்றிவேல் அம்மன் என்றும், செழிய நங்கை என்றும் அழைக்கப்பட்டு மக்களால் தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
முடிபு
கண்ணகிக்குக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான் சேரன்  என்று சேரனுக்கு அளிக்கப்பெற்ற முதன்மை நிலை, பாண்டியனுக்கு அளிக்கப்படாமையை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு கொற்கைவெற்றிவேல் அம்மன்என்ற நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு வாய்ப்பளிக்கிறது.
வெற்றிவேற் செழியனால் வழிபாடு செய்யப்பெற்றதால் கண்ணகி வழிபாடு, மன்னனின் பெயரால் இன்று வெற்றிவேல் அம்மனாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இருக்கின்ற காரணம் பற்றி அதன் வரலாற்றுப் பின்னணி மறைக்கப்படாமல் மீட்டுருவாக்கம் செய்யப்படுதல் அவசியமாகிறது.
வாய்மொழியாக வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற மக்களின் இலக்கியங்களே வரலாற்று ஆதாரங்களாகவும் இலங்குகின்றன. எழுத்து இலக்கியங்களுக்கு உள்ள வன்மை வாய்மொழி இலக்கியங்களுக்கு இல்லாதிருக்கலாம்; மாற்றம் பெறக்கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்கலாம். ஆனால் இவை புராணக் கதைகள் அல்ல; வரலாற்றுச் செய்திகளையும், இலக்கியச் சான்றுகளையும் தன்னுள் அடக்கிய பெட்டகங்கள். இவற்றையும் சான்றாதாரங்களாகக் கொண்டு ஆராய்கின்றபோது நிச்சயம் வரலாறுகள் திருத்தப்படலாம்.
அடிக்குறிப்பு
1.               சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, . 160.
2.   சோமலே, திருநெல்வேலி மாவட்டம், . 254.
3.   சிலப்பதிகாரம், 27வது காதை 127 – 130 வரிகள்.
4.   சிலப்பதிகாரம் 27வது காதை 130 – 138 வரிகள்.
5.   அருணாச்சலம் பிள்ளை, தகவலாளி, கொற்கை.